
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கடந்த வாரம் தம்புள்ளையில் நடந்து முடிந்த பள்ளிவாசல் தாக்குதலையடுத்து நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் இதுவரை காலமாக நிலவி வருகின்ற சமூக ஒற்றுமை சீர்குழைந்து விடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.
சிலர் மேற்படி விடயத்தை கண்டிக்கவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தூண்டிக்கொண்டுமுள்ளனர். இந்நிலையில் இஸ்லாம் காட்டிய வழிமுறையொன்று இருக்கிறது என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நினைவூட்ட விரும்புகிறது.
பிரார்த்தனையே ஒரு முஸ்லிமின் ஆயுதம் என்ற அடிப்படையில் துஆக்கள், தௌபாக்கள், இஸ்திஃபார் மற்றும் சுன்னத்தான நோன்புகள் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு வேண்டிக்கொள்ளும் அதேநேரம் சட்ட ரீதியாகவும் ஒழுங்காகவும் உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுதியாக நிற்கிறது.
கண்டனங்களை உரிய இடங்களுக்கு எத்தச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ஒவ்வொருவரும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதோ அல்லது வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபடுவதோ அல்லது போக்குவரத்துக்கு குந்தகம் விளைவிப்பதோ கூடாது.
அதேநேரம் ஒட்டுமொத்தமாக எம்மோடு இணங்கி நடக்கும் பௌத்த சகோதரர்களது மனம் புண்படுமாறு நடந்துகொள்ளவும் கூடாத. அவ்வாறே எமது பள்ளிவாசலை தாக்கினார்கள் என்பதற்காக மதங்களைத் தூற்றுவதை தவிர்ப்பதுடன் நடுநிலைமையானவர்களோடு நன்முறையில் நடந்து அவர்களது உள்ளத்தையும் நாம் வென்றிட வேண்டும்.
இது 'நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் இறைவன் என அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்' என்ற அல்குர்ஆனின் அறிவுரையாகும். ஒரு சிலர் பள்ளிவாசல் விடயத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்கள் என்பதற்காக முஸ்லிம்களாகிய நாம் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது.
எமக்கென இஸ்லாம் கூறியுள்ள வரையறைகளை பேணி நடந்து கொள்ளவே சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அழைக்கும் அதேவேளை, ஜம்இய்யத்துல் உலமா ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனினும் ஹர்த்தாலில் ஈடுபட விரும்புவோர் இஸ்லாமிய ஒழுங்குகளைப் பேணி நடக்கவேண்டும் எனவும் வரம்பு மீறும் போது ஏற்படும் விபரீதங்களையிட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறது.
அத்துடன், நாளை வியாழக்கிழமை 26ஆம் திகதி நோன்பு நோற்கும் படியும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒன்றுதிரண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனைவரையும் வேண்டிக்கொள்கின்றது.
No comments:
Post a Comment